search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காண்டிராக்டர் வீடு உள்பட 2 இடங்களில் 49 பவுன் நகைகள் கொள்ளை
    X

    கோவையில் காண்டிராக்டர் வீடு உள்பட 2 இடங்களில் 49 பவுன் நகைகள் கொள்ளை

    • அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர்.

    இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச்சந்திரன் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று இவரது மகன் முகுந்த் சந்திரா (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டை பூட்டி விட்டு தந்தையை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின் , கைசெயின் தங்க மணி உள்பட 26½ பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்க பணம், 2 போட்டோ காமராக்கள், கார் சாவி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடத்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அறையில் இருந்த லாக்கரில் வளையல், நெக்லஸ், கைசெயின், செயின் உள்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×