முகப்பேரில் பொதுமக்களை அச்சுறுத்திய 30 நாய்கள் பிடிக்கப்பட்டது

பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
முகப்பேரில் பொதுமக்களை அச்சுறுத்திய 30 நாய்கள் பிடிக்கப்பட்டது
Published on

அம்பத்தூர்:

அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாண்டி. இவரது மனைவி பிரதீபா. இவர்களது இரண்டரை வயது மகள் யாஸ்மிகா. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலையில் மின்தடை ஏற்பட்ட போது வீட்டின் முன்பு சிறுமி யாஸ்மிகா விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு சுற்றிய தெரு நாய் ஒன்று திடீரென யாஸ்மிகா மீது பாய்ந்து கடித்து குதறியது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி யடித்து சிறுமியை மீட்டனர். நாய் கடித்து குதறியதில் யாஸ்மிகாவின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மிகாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி யாஸ்மிகா வசித்த பகுதியில் சுற்றிய நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தி.மு.க. வார்டு கவுன்சிலர் எம்.இ.சேகர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர்.

அவர்கள் பதுங்கி சுற்றிய 30-க்கும் மேற்பட்ட நாய்களை வலைவீசி பிடித்தனர். மேலும் பல தெருநாய்கள் தப்பி ஓட்டம் பிடித்தன. அந்த நாய்களையும் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து சிறுமி யாஸ்மிகாவின் தந்தை தங்க பாண்டியன் கூறும்போது, எனது மகளை நாய் கடித்த போது நீண்ட நேரம் போராடி தான் குழந்தையை மீட்டோம்.

நாய்கடித்தது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்த போது அவர்கள் சிறுமியை கடித்த நாயின் புகைப்படம் இருந்தால் தான் நாயை பிடிக்க முடியும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்தனர். பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com