search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடுகாணி அருகே வனத்தில்  வெடிபொருளுடன் சுற்றிய 3 பேர் கைது
    X

    நாடுகாணி அருகே வனத்தில் வெடிபொருளுடன் சுற்றிய 3 பேர் கைது

    • 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்
    • வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடுவதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    இதையடுத்து கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில் 3 பேர் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடவும், தங்கத்துகள்களை தோண்டி சேகரிக்க வெடிபொருள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் உத்தரவின் பேரில், தேவாலாவில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு பிடிபட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தேவாலா அட்டி பகுதியை சேர்ந்த யோகேந்திரன் (வயது 40), பொன்னுரை சேர்ந்த பரமேஸ்வரன் (42), கீழ் நாடுகாணியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, யோகேந்திரன், பரமேஸ்வரன், ஜெயச்சந்திரன் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×