கோவையில் நடந்த வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 3 பேர் பலி

நஞ்சுண்டன் என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் நடந்த வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 3 பேர் பலி
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 71). சம்பவத்தன்று இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே நஞ்சுண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூலூர் அருகே உள்ள ஜடயம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (78). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- அவினாசி ரோட்டில் தென்னம்பாளையம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம் வைகந்தன்கரை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (48), இவர் தனது மகன் மோகன் பிரசாத் மற்றும் உறவினர்கள் கோபிநாத், கோபால் ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்கு வந்தார்.

காரை இந்திரா காந்தி ரோட்டை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கார் சேலம்- பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

மோகன் பிரசாத், கோபிநாத், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com