என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே இளம்பெண் கடத்தல் புகாரில் உறவினர்கள் 2 பேரிடம் விசாரணை- யாரும் கடத்தவில்லை என புதுப்பெண் கூறியதால் குழப்பம்
- மாலினியும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
- புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் போலீசில் புகார் செய்தார்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலினி (20). இவரும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
காதல் திருமணம்
அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் ஏறி கடந்த 3-ந் தேதி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மாலினியின் தாயார் செல்வராணி நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்து வந்தபோது 2 காரில் வந்த கும்பல் அந்த புதுப் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
2 பேரிடம் விசாரணை
அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, மாலினியை கடத்தி சென்று விட்டதாக கண்ணன் அளித்த புகாரில் விசாரணை நடத்தினோம். அப்போது மாலினியை அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் தற்போது மாலினி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும், தனக்கு திருமணமாகவில்லை என்றும் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.
இதனால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.






