search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம்  புதுமாப்பிள்ளை கொலையில் 2 பேர் இன்று கோர்ட்டில் சரண்
    X

    காவேரிப்பட்டணம் புதுமாப்பிள்ளை கொலையில் 2 பேர் இன்று கோர்ட்டில் சரண்

    • ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
    • இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான்கொட்டாயை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சரண்யா (21). ஜெகனும், சரண்யாவும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை மீறி சரண்யா கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜெகனை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஜெகனை நேற்று முன்தினம் அவரது மாமனார் சங்கர் (43) உள்பட சிலர் சேர்ந்து கிருஷ்ணகிரி டேம் ரோடு சாலையில் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கவுரவக்கொலை செய்தனர். இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக சங்கர், கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முழுக்கான்கொட்டாயில் உள்ள சங்கரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு ஜெகனின் உறவினர்கள் சென்றனர். அவர்கள் ஆவேசத்துடன் சங்கரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும், வீட்டில் உள்ளே இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் ஜெகனை கொலை செய்த வழக்கில் தலைமறைவான குற்றவாளிகள் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கரியன் என்கிற முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் இன்று மதியம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    Next Story
    ×