திண்டுக்கல்லில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது

2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 1½ பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்களை பறித்துச் சென்றனர். பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

குள்ளனம்பட்டி:

சென்னையைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் சம்பவத்தன்று இரவு திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 1½ பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்களை பறித்துச் சென்றனர். இதுகுறித்து குருசாமி திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி, டவுன் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டர்வாசு, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், ஏட்டுகள் ஜார்ஜ் எட்வர்ட், ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் குருவி சரவணன் (வயது 37), ஏர்போர்ட் நகரைச் சேர்ந்த குட்லி பிரபு (33) ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோதிரம், 4 செல்போன்கள், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com