

உடுமலை :
உடுமலையையடுத்த ஆர்.வேலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக உடுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆர்.வேலூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணசாமி என்பவரது மகன் ஜெயகிருஷ்ணன்(வயது 50) என்பவர் வீட்டு வாசலில் வைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் கயிறான் என்ற கதிரான்(வயது 62) என்பவரும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநில லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.