அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2.63 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2.63 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.
Published on

சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானவுடன் உயர்கல்வியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

வழக்கம்போல பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கும், கலை அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கும் விண்ணப்பித்தனர்.

பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பி.காம். (பொது), பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகமாக உள்ளது. அரசு கலை கல்லூரிகளில் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் முன்கூட்டியே நல்ல பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்து வருகிறார்கள்.

164 அரசு கலை கல்லூரிகளில் சேர கடந்த 8-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு கலைகல்லூரிகளை நோக்கி வருகிறார்கள்.

பி.காம். உள்ளிட்ட குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு வருடமும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இறுதி நாளாக இருப்பதால் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் மையங்களை நாடினர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாணவ-மாணவிகள் கடைசி நேரத்தில் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தனர்.

நேற்று வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 780 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இன்று இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்ப தால் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என்று உயர் கல்வித்துறை எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என தனியார் நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர். நந்தகுமார் தெரிவித்துள்ளார். ஏழை பெற்றோர் இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முக்கிய சான்றிதழ்கள் தேவைப்படுகிறது.

அதனை பெறுவதற்கு தாமதம் ஆவதால் குழந்தைகளை சேர்க்க கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com