search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16¾ கோடியில் சேமிப்பு கிடங்கு- அமைச்சர் தகவல்
    X

    நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டடு ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16¾ கோடியில் சேமிப்பு கிடங்கு- அமைச்சர் தகவல்

    • முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது.
    • நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியிலுள்ள வெட்டாறு கதவணை, எண்கண் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிடாரங்கொண்டான் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் நெல் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ரூ.238.07 கோடியில் சுமார் 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள புதுக்குடியில் ரூ.4 கோடியே 69 லட்சம் மதிப்பில் 4500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், முடிகொண்டான் பகுதியில் ரூ.7 கோடியே 68 லட்சம் மதிப்பில் 7 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும்.

    திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் 7250 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் என ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பில் 18,750 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் கப்பலூரில் 18 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் 3500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு கட்டவும் அனுமதி அளித்துள்ளார். தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்காக தமிழக அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத்தொகையான ரூ.2 ஆயிரத்து 57 கோடி நிதியினை விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து செல்லாமல் நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    Next Story
    ×