என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் 12 பவுன் நகைகள் கொள்ளை
- பாக்கியலட்சுமி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
- தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டபாளையம் ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் அன்பு சிவா. பேராசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்து கம்மல், செயின், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாக்கியலட்சுமி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைேரகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






