search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு
    X

    வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை காட்டினர்.
    • வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். சுண்டப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்.

    இவரது மனைவி உமாதேவி (27). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் குழந்தைகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் உமாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இந்த 2 செயின் பறிப்பு சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி மேகலா (50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது மேகலாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்துஇருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (24). சம்பவத்தன்று இவர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலையை முடித்து விட்டு கே.என்.ஜி. புதூர் அருகே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கீர்த்தனா கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    செயினை பறிகொடுத்த பெண்கள் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×