search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம விலங்கு கடித்து  குதறியதில் 11 ஆடுகள் பலி
    X

    மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலி

    • மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது.
    • மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    ஈரோடு, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (56) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து 50 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு இன்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் உடனடியாக பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் 8 ஆடுகள், 3 ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்தன. மர்ம விலங்கு கடித்து குதறியதில் 11 ஆடுகள் பலியாகி இருப்பது தெரியவந்தது. அதைப்பார்த்து விவசாயி வெங்கடாஜலம் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடிபட்ட நிலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இச்சம்பவம் குறித்து சித்தோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மர்ம விலங்கு ஒன்று பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது.

    இதுகுறித்து சித்தோடு போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பதிவாகியிருந்த மர்ம விலங்கின் கால் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்குள் இதேபோன்று மர்ம விலங்கு கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியாகி இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி, அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை அந்த மர்ம விலங்கு எந்த விலங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது,

    கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதிக்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. அது என்ன விலங்கு என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் மற்ற கால்நடைகளை வளர்த்து வருபவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

    மேலும் ஆடு, கோழி ரத்தத்தை ருசித்ததால் அந்த மர்ம விலங்கு மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்குள் வந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இதுவரை மர்ம விலங்கால் கடிபட்டு இறந்த ஆடு-கோழிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அந்த மர்ம விலங்கை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×