

கோவை,
கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனையடுத்து அவரது உறவினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சாய்பாபா காலனியில் இருந்து ஆம்புலன்சு புறப்பட்டு சென்றது. ஆம்புலன்சில் மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சக்திகுமார் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே தெரிந்தது.
உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து ஆம்புலன்சு ஊழியர்கள் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.