கட்டணம் வசூலித்து கச்சேரி நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி- அமைச்சர் கே.என்.நேரு

கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
கட்டணம் வசூலித்து கச்சேரி நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி- அமைச்சர் கே.என்.நேரு
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.

ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.

எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.

இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com