வேலூர் ஜெயிலில் கருணாசை சந்திக்க தகுதி நீக்கம் செய்யபட்ட எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு

வேலூர் ஜெயிலில் கருணாசை சந்திக்க சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. #Karunas
வேலூர் ஜெயிலில் கருணாசை சந்திக்க தகுதி நீக்கம் செய்யபட்ட எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு
Published on

வேலூர்:

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசினார். நாடார் சமுதாயம் பற்றியும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

வேலூர் ஜெயிலில் நீதி மன்ற காவலில் அடைக்கப்படும் கைதிகளுக்கான பிரிவில் தனி அறையில் கருணாஸ் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பக்கத்து அறைகளிலும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.அவரது மனைவி கிரேஸ் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என்.பார்த்திபன், பாலசுப்பிரமணி, ஜெயந்திபத்மநாபன் ஆகியோர் இன்று காலை ஜெயிலுக்கு கருணாசை சந்திக்க சென்றனர்.

திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி பெற்று கைதிகளை சந்திக்க முடியும். மற்ற நாட்களில் சந்திக்க அனுமதி கிடையாது எனக்கூறிய சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் அனுமதி மறுத்தனர்.

ஆனால் அவர்கள் ஜெயில் சூப்பிரண்டை சந்திக்க வேண்டும். உடனே பார்க்க வேண்டுமென கூறியதாக தெரிகிறது. அங்கு சூப்பிரண்டு இல்லை எனக் கூறியதையடுத்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில்:-

சிறைவிதிகள் படி இன்று யாரையும் பார்க்க முடியாது என கூறினர். ஜெயில் சூப்பிரண்டை பார்க்க முயற்சி செய்தோம். அவர் அங்கு இல்லை. நாங்கள் வக்கீல் என்பதால் முறைப்படி கருணாசை சந்தித்து பேசுவோம் என்றனர். #karunas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com