ஐந்தருவி சொகுசு விடுதிக்கு மாறிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்

பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு இடம்பெயர்ந்தனர். #MLAsDisqualificationCase
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ஐந்தருவி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியை படத்தில் காணலாம்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ஐந்தருவி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரியும் கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 2 நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்ய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தினார்.

கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியே விசாரணை முடிவடைந்துவிட்டது. ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்படும். இதனால் ஐகோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், அவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். அவர்களை அ.தி.மு.க. பிரமுகர்களோ மற்ற அதிகாரிகளோ தொடர்பு கொள்ள முடியாத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய தலைவர்கள் செய்துள்ளனர். நேற்று விடுதியில் தங்கிய எம்.எல்.ஏ.க்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மகா புஷ்கர இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினர். அப்போது அவர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினர்.

பின்னர் அனைவரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். அங்கிருந்து அகஸ்தியர் அருவிக்கு சென்று அங்கும் குளித்து மகிழ்ந்த எம்.எல்.ஏ.க்கள் இரவு தங்கள் சொகுசு விடுதிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3-வது நாளாக சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை அந்த சொகுசு விடுதி அருகே தங்களது ஆதரவாளர்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டனர். இன்று பகல் அவர்கள் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

குற்றாலத்தில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் நேற்று திருக்குறுங்குடியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கிருந்து நம்பி கோவிலுக்கும் சென்று வழிபட்டு ஆற்றில் குளித்து திரும்பியுள்ளனர். குற்றாலம் மற்றும் திருக்குறுங்குடியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை தென் மாவட்ட அ.ம.மு.க. பொறுப்பாளர் மாணிக்கராஜ் நேரில் பார்த்து தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

அவருடன் கழக அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம் (நெல்லை மாநகர்), பாப்புலர் முத்தையா (நெல்லை வடக்கு), சொக்கலிங்கம் (நெல்லை தெற்கு) மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள்.

அ.ம.மு.க. தொண்டர்கள் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com