

கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரத்திற்கு 6 நாட்கள் பணி நாட்களாக கொண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு அளவிலான சுத்திகரிப்பு பணி மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் இயங்காமல் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. மேலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி 2-வது சனிக்கிழமையான நேற்று கடலூரில் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், கருவூலம், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. இதை நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் கண்காணித்தனர்.