

அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு நீட்தேர்வு பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசை கண்டித்தும், வன்முறையை தூண்டும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு அரியலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக கவுதமன் இன்று அரியலூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இதற்கான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இயக்குனர் கவுதமன் மீதான 19 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு, அவர் அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்குகளை நான் சட்டப்படி சந்திப்பேன். கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதில் ஏராளமான தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.