சென்னை, திருச்சி உள்பட 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகத்தில் 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
மாநில வனத்துறை மந்திரிகளின் மாநாட்டில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மாநில வனத்துறை மந்திரிகளின் மாநாட்டில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Published on

சென்னை:

மாநில வனத்துறைகளின் மாநாடு நடைபெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிற மாநில வனத்துறை மந்திரிகள், இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நகர்ப்புற வனத்திட்டம் பற்றி பேசியதாவது:-

இந்தியா முழுவதும் 5 ஆண்டு காலத்தில் 200 இடங்களில் மாநகராட்சி அல்லது நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற வனத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை செயல்படுத்த சென்னை, வேலூர், சேலம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 நகர்ப்புற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு நகரப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 10 ஹெக்டேர் பரப்பளவு மற்றும் வன நிலத்தில் அதிகபட்சம் 50 ஹெக்டேர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வேலி அமைத்தல், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் தோட்டம் அமைப்பதற்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

தேசிய கேம்பா திட்டத்தில் இருந்து முள்வேலி, மண்வள பாதுகாப்பு பணிகள், நிர்வாக கட்டணங்கள், பராமரிப்பு பணிகளை செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் பங்கேற்பு மூலம் மேற்கொள்ளப்படும்.

2020-21-ம் ஆண்டிற்கு தமிழக வனத்துறைக்கு 23 ஆயிரத்து 999 ஹெக்டேர் பரப்பளவில் 1.56 கோடி நாற்றுகளை வளர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான அறிக்கை, அடுத்த மாதம் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் காவிரி மற்றும் அதன் துணை நதிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. காவிரி நதிநீரை புதுப்பிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை, ஐ.சி.எப்.ஆர்.இ. நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கோவையில் உள்ள வன மரபணு மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் மூலம் பெறப்பட உள்ளதாக இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com