திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் கைது

திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் கைது
Published on

வடமதுரை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் அன்று மாலை பரபரப்பான சூழல் காணப்பட்டது. அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி முடிந்து அனைவரும் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.

பல இடங்களில் கருணாநிதியின் மரண செய்தி கேட்டு ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.

தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணர்ச்சி பிழம்பாய் காணப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. திண்டுக்கல் அருகே வடமதுரை மூணாண்டி பட்டிபிரிவு பகுதியில் வந்த போது ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டவாறு பஸ்சில் இருந்து இறங்கினர்.

மேலும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் பெட்ரோல் கேன்களை தூக்கி எறிந்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவுப்படி வடமதுரை இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அரசு பஸ்சை எரிக்க முயன்றவர்கள் தி.மு.க.வினர் என தெரிய வந்தது. முன்னாள் துணைச் சேர்மன் கர்ணன் தலைமையில் நிர்வாகிகள் கருப்பையா, முருகன், தங்கராசு, பிரகாஷ் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கருப்பையா, முருகன், தங்கராசு, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய கர்ணனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com