

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகர்பகுதியில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் சாலையில் அவிழ்த்து விடுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் இந்த கால்நடைகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளது.
மேலும் சிலர் கால்நடைகளை தாக்கியும், கல்லால் எறிந்தும், சுடுதண்ணீரை ஊற்றியும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ரவுண்டுரோடு பகுதியில் ஒரு குதிரை பின்பகுதியில் பெரும் காயத்தோடு சுற்றித்திரிகிறது. மர்மநபர்கள் குதிரையின் வாலில் பட்டாசு வைத்து வெடிக்க செய்ததால் காயம் ஏற்பட்டதாக அப்பகுதியில் சிலர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனியார் டிரஸ்ட் நிர்வாகி ரமேஷ், கால்நடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கால்நடைத்துறை இணைஇயக்குனர் சாமுவேல்ஜெபராஜ், டாக்டர் சரவணக்குமார், விலங்குகள் நலவாரிய அமைப்பை சேர்ந்த சிவக்குமார், யோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் குதிரையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் திண்டுக்கல் நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.