

சென்னை:
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியின் துணை பொதுச் செயலாளர் எல்லோரது கருத்துக்களை கேட்டறிந்த பிறகே புதிய பொறுப்புகளை நிர்வாகிகளுக்கு வழங்கி உள்ளார். அவர்களுக்கு சிலர் அழுத்தம் தருகின்றனர். அதனால்தான் சிலர் பதவியை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
டி.டி.வி. தினகரனை எதிர்ப்பவர்கள் அவர் கொடுத்து பதவியில் இருந்து விலக வேண்டும். அமைச்சர் உதயகுமார், துணைப் பொதுச் செயலாளரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதன் முதலில் தலைமை செயலகத்துக்கு செருப்பு அணிந்து போக மாட்டேன் என்று கூறியவர் அமைச்சர் உதயகுமார். ஜெயலலிதா இருக்கும் இடம் கோவில் என்றார்.
அதன்பிறகு விசுவாசம் என்றால் ஓ.பி.எஸ். என்று புகழ்ந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியை வழி நடத்த தகுதியானவர் என்றார்.
ஜெயலலிதா சமாதிக்கு சென்று சசிகலாதான் அ.தி. மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார். இவர் மாத்தி மாத்தி பேசுவதில் கைதேர்ந்தவர். மகா பச்சோந்தி.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை இப்போது துணைப் பொதுச் செயலாளருக்கு தான் நிர்வாகிகளை நியமிக்க அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணைய பிரமாண பத்திரங்களில் பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்து. இந்த ஆட்சியும் பொதுச் செயலாளரால் உருவாக்கப்பட்டதுதான்.
பொதுச் செயலாளர் செயல்பட முடியாத சூழலில் உள்ளதால் கட்சியை துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நடத்துகிறார். எனவே கட்சி நிர்வாகிகளை நியமிக்க யாருடைய அனுமதியையும் அவர் கேட்க வேண்டிய தில்லை. டி.டி.வி.தினகரனை எதிர்ப்பவர்கள் அவர் கொடுத்த பதவியில் இருந்து விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.