களக்காடு வனப்பகுதியில் காட்டெருமைகளை வேட்டையாடும் செந்நாய்கள்

களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
காட்டெருமைகளை செந்நாய்கள் வேட்டையாட முயலும் காட்சி
காட்டெருமைகளை செந்நாய்கள் வேட்டையாட முயலும் காட்சி
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் 115 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இதில் பதிவான படங்களை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதும் தானியங்கி கேமராவில் பதிவான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த மாமிச உண்ணி ஆகும். அனைத்து பகுதி காடுகளிலும் வாழும் தன்மை கொண்டவை. கூட்டம், கூட்டமாக வாழும் செந்நாய்கள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டவைகளாக திகழ்கின்றன. தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட விலங்குகளையும் தனது புத்தி கூர்மையால் எளிதில் வேட்டையாடும் செந்நாய்கள் புள்ளிமான், காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, கோழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளை விரும்பி உண்ணும்.

இவைகள் 4 முதல் 10 குட்டிகளை ஈனும். இவைகளின் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் 4,500 முதல் 10 ஆயிரம் வரையிலான செந்நாய்கள் வாழ்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கை படி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் தானியங்கி கேமரா மூலம் தெரியவருகிறது.

இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com