

ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். தற்போது நிலத்தடி நீர் இல்லாததால் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்து குதறியது.மேலும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அந்த நாய்கள் கடித்தது.
இது குறித்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும்பொது மக்களை கடித்து குதறிய நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று காலை சுமார் 4 மணியளவில் ஆனந்த் வளர்த்துள்ள கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 20 கோழிகள் இறந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இன்று காலை ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு இறந்த கோழிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.