தாராபுரத்தில் விதை மையங்களில் அதிகாரி ஆய்வு

தாராபுரத்தில் உள்ள விதை மையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு நடத்தினார்.
விதை மையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
விதை மையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
Published on

தாராபுரம்:

தாராபுரத்தில் உள்ள விதை மையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். விதை நெல் தேவை அதிகரித்து வருவதால் உதவி இயக்குனர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டார்.

தற்போது பருவமழை தொடர்ந்து பெய்வதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்திய மற்றும் நீண்ட கால சம்பா நெல் ரகங்களின் நாற்று வயல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மத்திய மற்றும் நீண்ட கால சம்பா நெல் ரகங்களான ஏ.டீ.டி 38, ஐ.ஆர்.20, ஏ.டீ.டி 46, கோ.ஆர் 50, சாவித்திரி, சி.ஆர் 1009 ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது.

இத்தேவையை பூர்த்தி செய்ய 25 ஆயிரம் டன் வயல் மட்ட விதை இருப்பில் உள்ளது. அவற்றின் சுத்திகரிப்பு பணி மற்றும் பகுப்பாய்வு நடந்து வருகிறது. இதை உதவி இயக்குனர் பார்வையிட்டார். மேலும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று வினியோகத்திற்கு தயார் நிலையில் உள்ள பைகளின் தரம் மற்றும் கொள்ளளவை சரிபார்த்தார்.

பிறகு வயல் மட்ட இருப்பு பதிவேடு, சுத்தி பணிபதிவேடு, சான்றட்டைபதிவேடு தகுந்த விதை சான்று நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாராபுரம் விதைசான்று அலுவலர்கள் லதா, மணி, காங்கேயம் விதைச்சான்று அலுவலர் சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com