

சென்னை:
சென்னையில் டெங்கு தடுப்பு மற்றும் பருவ மழையை எதிர் கொள்வது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் கமிஷனர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் மழைநீர் தேங்கும் வகையிலும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி 384 மருத்துவமனைகள் 1727 நிறுவனங்கள், 1786 புதிய கட்டுமான பணி இடங்கள், 1272 வணிக கட்டிடங்கள், 789 அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 9,964 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.25 லட்சத்து 76,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9247 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 4 லட்சத்து 61 ஆயிரத்து 643 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் 6,998 நபர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மருத்துவ குழுக்கள் மூலம் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் 1894 கி.மீ. நீளத்தில் 1,751 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 1204 கி.மீ. நீளத்திற்கு ரூ.10.31 கோடியில் தூர்வாரும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
கொடுங்கையூர் கேப்டன் கார்டன் மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகள் உள்ளிட்ட பெரிய, சிறிய கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு மழைநீர் எளிதாக வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.