டெங்கு காய்ச்சல் சிகிச்சை: கரூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் அன்பழகன்
கலெக்டர் அன்பழகன்
Published on

கரூர்:

கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், டெங்கு தடுப்பு பிரிவில் உள்நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி, தானும் பருகினார். 

அதனைத்தொடர்ந்து டெங்கு தடுப்பு பிரிவில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளையும், பிற காரணங்களுக்காக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக சராசரியாக 300 நோயாளிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் நபர்களை ஆரம்ப நிலையிலேயே முழு உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு டெங்கு காய்ச்சல் இருக்கின்றதா? என்பது உறுதிசெய்யப்படுகிறது. இதுவரை, ஒரு சிறுமிக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுமி மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றார். அப்போது கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரோஸிவெண்ணிலா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாக்கியலெட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com