

அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.