காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு

பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. #YasinMalik
காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைப்பு
Published on

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும் பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

விசாரணை காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக்கை வரும் மே 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com