

புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொலை வழக்கில் முன்னர் டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் கீழ்கோர்ட் அளித்த மரண தண்டனை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் தலைநகரமான டெல்லி கற்பழிப்பின் தலைநகரமாக மாறிவருவதாகவும் தினந்தோறும் குறைந்தபட்சம் நான்கு பெண்கள் இங்கு கற்பழிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், 2012-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய இந்த கற்பழிப்புக்கு பின்னர், டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வந்துள்ளது. தற்போது, நாளொன்றுக்கு நான்கு கற்பழிப்பு சம்பவங்கள் என்ற நிலையை எட்டியுள்ளதாக டெல்லி போலீசாரின் வழக்குப்பதிவு தொடர்பான தகவல் திரட்டின் மூலம் தெரிய வந்துள்ளது.
2013-ம் ஆண்டில் 1,636 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள், 2014-ல் 2,166 ஆகவும், 2015-ல் 2,199 ஆகவும் அதிகரித்துள்ளது. பின்னர், 2016-ல் 2,155 சம்பவங்களாகவும், இந்த (2017) ஆண்டில் மார்ச் 15-ம் தேதிவரை டெல்லியில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் டெல்லி போலீஸ் துறையின் ஆவண குறிப்புகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.