டெல்லி: இறந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை இன்று உயிரிழந்தது

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Published on

புதுடெல்லி:

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 30-ம் தேதி ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி, மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரிடம் கொடுத்தனர்.

குழந்தையின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தபோது அதன் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். உயிருள்ள குழந்தையை இறந்துவிட்டது என தவறாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். டெல்லி அரசும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, உயிருள்ள குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக இரண்டு டாக்டர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி இறந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com