

புதுடெல்லி:
ராணுவ படைப்பிரிவுகள், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் சக்தி வாய்ந்த சாதனங்களை பிரைவேட் நிறுவனத்துக்கு சப்ளை செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ராணுவ அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ராணுவ கிழக்கு பிராந்தியத்தில் திட்டமிடல் மற்றும் என்ஜினீயரிங் பிரிவில் பணியாற்றி வருபவர் சைபால் குமார். இவர், கர்னல் அந்தஸ்தில் இருப்பவர்.
ராணுவ படைப்பிரிவுகள், பாறைகளை உடைக்க பயன்படுத்தும் சக்தி வாய்ந்த சாதனங்களை மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த எக்ஸ்டெக் எக்யூப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சப்ளை செய்ய அவர் அந்நிறுவனத்திடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
அதில், முதல் தவணையாக ரூ.50 ஆயிரத்தை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் இரண்டாவது தவணையாக ரூ.50 ஆயிரத்தை அந்த தனியார் நிறுவனத்தின் இயக்குனர் விஜய் நாயுடு சமீபத்தில் புனேவில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்து ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவரது நடமாட்டத்தை சி.பி.ஐ. கண்காணித்தது.
அவர் லஞ்சப்பணத்தை கொடுத்த பிறகு, அவரையும், ராணுவ அதிகாரியையும் பிடித்து கைது செய்தது. லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரத் நாத், பிரதிநிதி அமித் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
புனேவில் 4 இடங்களிலும், கொல்கத்தாவில் 2 இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.