

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவிலும் நடைபெறும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் இன்று இரண்டு குழுவினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் சிக்கினர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை இன்று இரவுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர்கள் இரவே மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளன. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் நடைபெறும்.
மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்கள் டார்ச் அடித்து உதவி கேட்டுள்ளனர். எனவே விஞ்ச் பயன்படுத்தி மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.