

சென்னை:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்திவரும் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குதித்தார். ஆனால், வேட்பு மனுவில் சில விபரங்கள் விடுபட்டு இருந்ததால் அவரது வேட்பு மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை தலைமை அலுவலகத்தின் மீது நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த தாக்குதலில் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, நொறுங்கியதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.