

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா புதிய கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று கட்சிக்கு பெயரிட்ட அவர் தி.நகரில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றினார்.
இந்நிலையில் தீபா அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் நீண்ட விளக்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தீபா கூறியிருப்பதாவது:-
ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள். பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.
எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. என்னை விட்டு விடுங்கள். நான் சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டேன். எனக்கு பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு அரசியல் வேண்டாம். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் போலீசில் புகார் செய்வேன். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.