

போடி:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏலக்காய் பயிரிட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடி, தேவாரம், சிலமலை ராசிங்காபுரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயில் காரணமாக ஏலக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்டு கிழங்குகள் ஒடிந்து அடியோடு சாய்ந்து வருகிறது. இதனால் 3 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளைச்சல் குறைந்ததால் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. முதல் தர ஏலக்காய் ஒரு கிலோ ரூ.5200-க்கும் நடுத்தர வகை ரூ.4,600-க்கு விற்பனையாகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் வியாபாரிகள் வாரந்தோறும் ஒரு லட்சம் கிலோவிற்கு மேலாக ஏலக்காய்களை வாங்கி செல்கின்றனர்.
ஆனால் தற்போது 20 ஆயிரம் கிலோ மட்டுமே வரத்து உள்ளது. இதனால் கொள்முதல் செய்ய அதிக பணம் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் கடைகளை அடைத்து தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஏலக்காய் கடைகள் அடைக்கப்பட்டதால் ஏலக்காய்களை தரம் பிரிக்கும் மற்றும் பார்சல் செய்யும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள், லோடுமேன்கள் என பல்வேறு தரப்பினரும் வேலை இழந்துள்ளனர்.