

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உபி அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், ரேபரேலியில் நடைபெற்ற விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரார்த்தித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.