கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்

சேலம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அவரது தாய், கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதலை கணவரிடம் தெரிவித்ததால் மகளை கொன்றேன்- கைதான தாய் வாக்குமூலம்
Published on

ஆத்தூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சிங்கபூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களது மகள் ஷிவானி(5).

நேற்று முன்தினம் இரவு பிரியங்கா காந்தி சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மகள் ஷிவானியை தள்ளி விட்டு கொன்றார்.

இது தொடர்பாக போலீசார் பிரியங்கா காந்தியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்றதை ஒப்புக் கொண்டார்.

பிரியங்கா காந்திக்கு பஸ் கண்டக்டர் குமார் மற்றும் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன் பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்ற கால் டாக்சி டிரைவர் ஆகியோருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் கள்ளக்காதல் மோகத்தில் பிரியங்காகாந்தி 2 பேரிடமும் மாறி, மாறி உல்லாசமாக இருந்து வந்தார். கள்ளக் காதலர்களுக்கு உல்லாசமாக இருப்பதற்கு அவர் பணமும் கொடுத்து வந்தார்.

வெங்கடேசனுடன் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் பிரியங்கா காந்திக்கு தொடர்பு ஏற்பட்டது. கள்ளக் காதலனை சந்திப்பதற்காக அவர் அடிக்கடி குழந்தை ஷிவானியுடன் சேலம் வந்தார். பின்னர் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள வெங்கடேசன் வீட்டில் 2 பேரும் ஜாலியாக இருந்து வந்தனர்.

கள்ளக்காதலனை குழந்தைக்கு சித்தப்பா என்று அறிமுகம் செய்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையிடம் செல்போனை கொடுத்து விட்டு வெங்கடேசனுடன் பிரியங்கா காந்தி உல்லாசமாக இருந்தார்.

அப்போது வெளிநாட்டில் இருந்து சங்கர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது குழந்தை ஷிவானி அந்த போனை எடுத்து பேசியது. குழந்தையிடம் அவர் எங்கே இருக்கிறாய் ? என கேட்டார். அதற்கு தான் சித்தப்பா வீட்டில் இருப்பதாக ஷிவானி கூறினார். அம்மா செல்போனில் அவருடன் மணிக்கணக்கில் பேசி முத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

இதையறிந்த பிரியங்கா காந்தி தனது கள்ளக்காதலை கணவரிடம் சொல்லியதால் ஆத்திரம் அடைந்து குழந்தையை கிணற்றில் வீசி கொன்று, கொள்ளை போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இந்த விவரங்களை பிரியங்கா காந்தி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

போலீசார், பிரியங்கா காந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com