

சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி.
1991-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். அதனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி ஐகோர்ட்டில், நளினி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, என்னுடைய மகள் சிறைக்குள் பிறந்தாள். அவளுக்கு தற்போது 25 வயது ஆகிறது. எனவே, அவருக்கு திருமணம் செய்து வைக்கவேண்டிய கடமை எனக்கு உள்ளது.
நான் நீண்ட காலமாக சிறையில் உள்ளதால், அவருக்கு உரிய மாப்பிள்ளையை பார்க்க முடிய வில்லை. அதனால், உறவினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, என் மகளுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுள்ளது.
இதற்காக எனக்கு 6 மாதம் பரோலில் விடுவிக்க சிறை கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர் மறுத்து விட்டார். அதனால், எனக்கு 6 மாத பரோல் வழங்க இந்த ஐகோர்ட்டு உத்தர விட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.