தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது: இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச்சு

தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது என்று சென்னையில் நடந்த பவள விழாவில் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.
தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது: இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச்சு
Published on

‘தினத்தந்தி’ பவள விழாவில் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்று பேசும்போது கூறியதாவது:-

“தினத்தந்தி” பவள விழாவிற்கு வருகை தந்து, விழாவினை சிறப்பித்துக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களே!

இந்த விழாவிற்கு மேலும் சிறப்பூட்ட வருகை தந்திருக்கும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களே!

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே!

எங்களது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அமைச்சர்களே! தலைவர்களே! கலைஞர்களே! நீதி அரசர்களே! துணை வேந்தர்களே! தூதரக அதிகாரிகளே! சட்டசபை- பாராளுமன்ற உறுப்பினர்களே!

தொழில் அதிபர்களே, வியாபாரிகளே, தினத்தந்தி குழும சக உழைப்பாளிகளே,

உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த மண்ணின் மைந்தர், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், 2008-ம் ஆண்டு நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், எதிர்கால இந்தியாவுக்கான தனது விருப்பத்தை வெளியிட்டார். அதை “வி‌ஷன் 2020” என்றழைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவில் வேளாண்மை, தொழில் மற்றும் சேவைத் துறைகள் இசைக்குழு போன்று ரீங்காரமிட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் பொறுப்பு மிக்கதாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், ஊழல் இல்லாததாகவும் இருக்க வேண்டும்” என்றார்.

அவரது எல்லையற்ற மதி நுட்பத்தால், அவர் கண்ட “வி‌ஷன் 2020” தீர்க்கத்தரிசனத்தால் அவர் மாபெரும் தலைவராக உயர்ந்துள்ளார். அவர் ஏற்படுத்திய மாற்றம், “புதிய இந்தியா” வுக்காக பெரும்பாலானவர்களை புடம் போட்ட தங்கமாக மாற்றியுள்ளது. அதோடு அவர் கலங்கரை விளக்காக இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக செம்மைப்படுத்தியுள்ளார்.


‘தினத்தந்தி’யின் 75-வது ஆண்டு பவள விழாவில் பங்கேற்க வருகை தந்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

பதிப்பாளர், பத்திரிகையாளர், பாராளுமன்ற உறுப்பினர், தற்போது தமிழக கவர்னராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் அவர்களையும் இந்த விழாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டு பெண்களுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களையும் வருக, வருக என வரவேற்கிறேன்.

தமிழக அரசியலில் சமீப காலமாக எழுந்துள்ள சவாலான நிலையிலும் தனது அமைதியான, ஒருங்கிணைந்து செயலாற்றும் திறன் கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் வருக, வருக என வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ‘தினத்தந்தி’ செய்துள்ள சேவைகளுக்கும், சாதனைகளுக்கும் இந்த மேடையில் வீற்றுள்ள புகழ்பெற்ற மேன்மைமிக்கவர்களே சான்றாகும். எங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் 1965-ம் ஆண்டு முதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி கல்வித் துறைக்கும் நாங்கள் மிகச் சிறந்த பங்களிப்பை செய்துள்ளோம்.

‘தினத்தந்தி’ யாருக்கும் சாதகமாக இல்லாமல் அல்லது பாரபட்சம் பார்க்காமல் நல்ல, சிறந்த பத்திரிகையாக திகழ நல்லெண்ணம் கொண்டவர்களும், உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும் இங்கு இருப்பது எங்களது மன உறுதிக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

‘தினத்தந்தி’ நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மூத்த தமிழறிஞர் விருதும், இலக்கிய பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதுகளைப் பெறுபவர்கள் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து பெறும் சிறப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மூத்த ‘தமிழறிஞர் விருதை’ ஈரோடு தமிழன்பன் பெறுகிறார். தினத்தந்தியின் ‘இலக்கியப் பரிசை’ டாக்டர் வெ.இறையன்பு பெறுகிறார்.

‘தினத்தந்தி’ பேப்பர் வினியோகிக்கும் சைக்கிள் பையனாக பணியாற்றி இன்று தொழில் அதிபராக உயர்ந்திருக்கும் செவாலியர் வி.ஜி.சந்தோ‌ஷம் ‘சாதனையாளர் விருது’ பெறுகிறார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com