இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு

உடல் நலக்குறைவு காரணமாக சுதாகர் ரெட்டி ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி.ராஜா
டி.ராஜா
Published on

புதுடெல்லி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த  சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நடைபெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தின்போது அக்கட்சிக்கு புதிய தேசிய பொதுச் செயலாளராக யாரை நியமிக்கலாம்? என விவாதிக்கப்பட்டது.

தற்போது பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக இருக்கும் மூத்த தலைவரான டி.ராஜாவின் பெயர் இதற்காக ஒருமனதாக முன்மொழியப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949 அன்று பிறந்த டி.ராஜா (எ) டேனியல் ராஜா 1994 முதல் அக்கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com