ஒடிசாவில் தாண்டவமாடிய பானி புயல் - மீட்புப் பணிகள் தீவிரம்

பானி புயல் நேற்று கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. #CycloneFani
ஒடிசாவில் தாண்டவமாடிய பானி புயல் - மீட்புப் பணிகள் தீவிரம்
Published on

புவனேஷ்வர்:

வங்கக் கடலில் உருவான பானி புயல் நேற்று முன்தினம் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது.

2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது. பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 200க்கு மேற்பட்ட ரெயில்கள் ரத்தானது. புவனேசுவரத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று கரையை கடந்தது. இதில் 14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.

சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின. புவனேசுவரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சின்னாபின்னமாகின.

கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.

குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’ புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். புயல் மழைக்கு மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர். புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி படுகாயம் அடைந்த பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்பு படையின் 525 குழுக்கள் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. #CycloneFani

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com