சுங்க அதிகாரிகள் சோதனையின்றி மலேசியா சென்ற 160 பயணிகள் - ஏர் ஏசியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

திருச்சி விமான நிலையத்தில் சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport
சுங்க அதிகாரிகள் சோதனையின்றி மலேசியா சென்ற 160 பயணிகள் - ஏர் ஏசியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
Published on

திருச்சி:

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பாக சுங்க அதிகாரிகள் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனையிடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை சுங்க இலாகா அதிகாரிகள் 20 பேர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவர்களை உள்ளே விட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை ஊழியர்களுக்கு விமான நிலையத்தின் உள்ளே வருவதற்கு நுழைவு பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த நுழைவு பாஸை மாதந்தோறும் அவர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் நுழைவு பாஸ் கடந்த டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்ட நிலையில் அவர்கள் அதனை புதுப்பிக்காமல் திருச்சி விமான நிலையத்திற்கு பணிக்கு வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் புதிய அடையாள அட்டை கொண்டு வந்தால்தான் அனுமதி அளிக்கப்படும் என்று தொழிற்பாதுகாப்பு படையினர் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

இதற்கிடையே ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு செல்ல 160 பயணிகள் தயாராக இருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தும் சுங்க அதிகாரிகள் இல்லாததால் சோதனை நடத்த முடியவில்லை.

இதையடுத்து ஏர் ஏசியா மேலாளரின் அனுமதியுடன் சுங்கத்துறை சோதனையின்றி 160 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலேசியா விமானம் சென்றது. இதையடுத்து சுங்க சோதனையின்றி பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு சுங்க இலாகா சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகள் பரிசோதனைக்காக காத்திருந்தனர். ஆனால் சோதனை செய்ய யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு படையினர் விமான நிலைய இயக்குனர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சுங்கத்துறை ஊழியர்களுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து பணிக்கு சென்றனர். பின்னர் விமான பயணிகள் சோதனை செய்யப்பட்டு வெளியே வந்தனர். இதனால் விமான நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TrichyAirport

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com