பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்களிடம் பணப்புழக்கம் இருமடங்காக அதிகரிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்களிடம் பணப்புழக்கம் இருமடங்காக அதிகரிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ஒரு மாதத்தில் மக்களிடம் இருந்த பணப்புழக்கம் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Demonetisation
Published on

மும்பை:

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000  ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, புழக்கத்தில் இருந்த பண மதிப்பில் 86 சதவிகிதம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். 

அதன் பின்னர், புதிய 2000, 500, 200 ரூபாய்கள் அச்சடித்து வெளியிடப்பட்டன. அதிக தேவை இருந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டன. 

செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புழக்கத்தில் இருந்த 99 சதவிகித செல்லாத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ.15.28 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் ஜூன் 30, 2017-ல் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னான ஒரு மாதத்தில் ரூ.7.8 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம் தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.18.5 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல, ரிசர்வ் வங்கி புழக்கத்திற்கு விட்ட ரூபாயும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின் ரூ.8.9 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி புழக்கத்திற்கு விட்டிருந்த நிலையில், அது தற்போது ரூ.19.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதாவது, ரிசர்வ் வங்கி புழக்கத்திற்காக வெளியிட்ட மொத்த ரூபாயில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்னர் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும், பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது. செயற்கையான பணத்தட்டுப்பாடு சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com