சிக்கன நடவடிக்கை: மனுநீதிநாள் முகாமுக்கு பஸ்சில் சென்ற கடலூர் கலெக்டர்

கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் சிக்கன நடவடிக்கையாக மனுநீதிநாள் முகாமுக்கு 30 அதிகாரிகளுடன் பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
மனுநீதிநாள் முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் பஸ்சில் சென்ற காட்சி.
மனுநீதிநாள் முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் பஸ்சில் சென்ற காட்சி.
Published on

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்ட கலெக்டராக பிரசாந்த் இருந்து வருகிறார். இவர் புதுமையாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கலெக்டருக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர்ரக இனோவா காரை பயன்படுத்தவில்லை. அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்தி அவர்களின் கல்வி திறமைகளை பரிசோதித்து வருகிறார்.

பொதுவாக மனுநீதிநாள் முகாம்களுக்கு கலெக்டர் தனது காரில் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த முகாமுக்கு காரில் செல்லாமல் பஸ்சில் செல்ல கலெக்டர் பிரசாந்த் முடிவு செய்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள தனது காரில் செல்லாமல், அரசு பஸ்சில் அதிகாரிகளுடன் செல்ல முடிவு செய்தார்.

கடலூரில் உள்ள கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு பஸ் புறப்படுவதால், முகாமில் பங்கேற்கும் அதிகாரிகள் காலை 8 மணிக்கே கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டரின் முகாம் அலுவலகத்துக்கு காலையில் அதிகாரிகள் வந்தனர். அரசு பஸ்சும் வந்தது.

கலெக்டர் பிரசாந்த் முதலில் அந்த பஸ்சில் ஏறினார். அதைத் தொடர்ந்து 30 அதிகாரிகளும் அதே பஸ்சில் ஏறினர்.

காலை 9 மணிக்கு அந்த பஸ் அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி புறப்பட்டது. மனுநீதிநாள் முகாமை கலெக்டர் தலைமையேற்று நடத்துகிறார். மாலையில் அதே பஸ்சில் கடலூருக்கு திரும்புகிறார்.

பஸ் பயணத்துக்கான டிக்கெட் தொகையை அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு மாவட்ட நிர்வாகமே செலுத்தி விடுகிறது. மனுநீதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கலெக்டர் காரில் செல்லும் போது அவரை பின்தொடர்ந்து அதிகாரிகளும் கார்களில் செல்வார்கள். இதனால் அதிக அளவில் செலவாகும். எனவே சிக்கன நடவடிக்கையை கையாள்வதற்காக கார்களை தவிர்த்து கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்று மனு நீதிநாள் முகாமில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com