

பெங்களூரு:
கர்நாடக சுற்றுலா மற்றும் கன்னட வளர்ச்சித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சி.டி.ரவி. சிக்கமகளூரு (மாவட்டம்) தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. கட்சி மேலிடம் உத்தரவிட்டால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து முதல்-மந்திரியிடம் கடிதம் கொடுப்பேன் என்று சி.டி.ரவி கூறினார்.
இதற்கிடையே மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதாவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறினார். இந்த நிலையில் மந்திரி சி.டி.ரவி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நேரில் வழங்கியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது குறித்து எடியூரப்பா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.