

சென்னை:
ஆயுதப்படை போலீஸ்கார்கள் ராம்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 157 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.
அதில் தங்களுக்கு பணி உயர்வு வழங்கும்போது, ஊதிய முரண்பாடு உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு ஜூனியராக உள்ளவர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள், பணி வரன் முறையில் குளறுபடி உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா மனுதாரர்களின் கோரிக்கையை பரீசிலித்து ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஆயுதப்படை காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.