ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி- நீதிபதிகள் உத்தரவு

புதிதாக நியமிக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி- நீதிபதிகள் உத்தரவு
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணியம் பிரசாத் உள்பட 7 பேரும் கடந்த 4-ந் தேதி நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில் சுப்பிரமணியம் பிரசாத்தை நீதிபதியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டிலும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், சுப்பிரமணியம் பிரசாத் அதுபோன்று பணியாற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுப்பிரமணியம் பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என்று வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நியமனம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு தகுதி உள்ளது. இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் குழு(கொலிஜியம்) முடிவு செய்துள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com