

நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகள் வினிதா (வயது 19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி (25). தனியார் நிதி நிறுவன ஊழியர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வினிதாவின் குடும்பத்தினர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய வினிதா, கடந்த 4-ந்தேதி மாசிலாமணியை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு, தமிழர் விடுதலை களம் நிர்வாகி முத்துகுமரன் தலைமையில், உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளை சந்தித்து மனு வழங்கினர். அதில், வினிதாவின் குடும்பத்தினர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் அவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.